உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் அழைத்து செல்லும் போது எடுத்த படம்.  

காரிமங்கலம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-10-24 15:04 IST   |   Update On 2023-10-24 15:04:00 IST
  • தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் 6 கிலோ தங்கம் கொள்ளையடித்த வழிக்கில் மேலும் 3 பேரை கைது சிறையில் அடைத்தனர்.
  • இதுவரை கேரளாவை சேர்ந்த 12 பேர் சிக்கியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கடந்த மாதம் 28-ந்தேதி கர்நாடகாவில் இருந்து கோவைக்கு நகைகள் வாங்கிச் சென்ற பிரசன்னா என்பவரை பின்தொடர்ந்து வந்த கொள்ளை கும்பல், காரிமங்கலம் அடுத்த பூலாப்பட்டி அருகே, காரை வழிமறித்து கடுமையாக தாக்கி காருடன் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 60 லட்சம் ரூபாய் கடத்தி சென்றனர்.

இதனையடுத்து பிரசன்னா காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட எஸ்.பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொள்ளை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் 15 பேர் ஈடுபட்டதும் அவர்கள் அனைவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த தங்க நகை கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட 6 கிலோ தங்க நகைகள், ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 4 கார்கள், 8 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் தலைமறைவாகயிருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர். அதில் ஒசூர் அருகே பதுங்கியிருந்த ஆசிப் (32), விஷ்னு (27), அக்க்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரை கைது செய்து காரிமங்கலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். கேரளாவை சேர்ந்த 15 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்டிருந்த நிலையில், அதில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.  

Tags:    

Similar News