உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

Published On 2023-10-25 07:55 GMT   |   Update On 2023-10-25 07:55 GMT
  • தொழிலாளி கைது
  • அடிக்கடி மது அருந்திவிட்டு சுமனையும், சுமனின் தாயாரையும் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி புதுகாட்டு விளையை சேர்ந்தவர் சுமன் (வயது 40), ஆட்டோ டிரைவர். இவரது வீட்டருகில் வசித்து வருபவர் சிம்சன். இவரது மகன் அபின் (27). இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு சுமனையும், சுமனின் தாயாரையும் அவதூறாக பேசி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சவாரிக்கு சென்று விட்டு சுமன் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அபின் இரவு எங்கு சென்று வருகிறாய் என கேட்டு சுமனை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதை சுமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பால்மணி, அபின் தந்தை சிம்சன், தாயார் முத்துபாய் ஆகியோர் சேர்ந்து சுமனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அபின், பால்மணி இருவரும் சுமனை கம்பியால் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சுமன் சத்தம் போடவே கொலை மிரட்டல் விடுத்து விட்டு 4 பேரும் தப்பிச்சென்று விட்டனர். காயமடைந்த சுமன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சுமன் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News