உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு குமரியில் 6 மையங்களில் எழுத்து தேர்வு

Published On 2022-06-25 07:41 GMT   |   Update On 2022-06-25 07:41 GMT
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு
  • வெளி மாவட்டத்திற்கு சென்ற போலீசார்

நாகர்கோவில்:

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது.

குமரி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத 5 ஆயிரத்து 888 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, ஆரல்வாய் மொழி ஜெயமாதா பொறியியல் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி, சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் எழுத்து தேர்வு நடந்தது.

நாகர்கோவில்  பொன் ஜெஸ்லி கல்லூரியில் பெண்களுக்காக தனித் தேர்வு மையம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தேர்வு மையத்திற்கு வந்த பெண்களை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். கல்லூரி வாசலில் அவர்களை விட்டு விட்டு வெளியே காத்திருந்தனர். பெண்கள் கொண்டு வந்திருந்த கைப்பைகளையும் வெளியே வைத்து விட்டு தேர்வு எழுத உள்ளே சென்றனர்.

மற்ற தேர்வு மையங்களிலும் காலையிலேயே தேர்வு எழுதுபவர்கள் வந்திருந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் பலத்த பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு கூட சீட்டினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.

அதை பரிசோதனை செய்தபிறகே தேர்வு எழுதுபவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன்கள், கால்குலேட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து மதியத்திற்கு பிறகு தேர்வு நடைபெறுகிறது. இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் பெரும்பாலானவர் அந்தந்த தேர்வு மையங்களிலேயே காத்திருந்தனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பி ரசாத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொண்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வு எழுதுபவர் களுக்கு செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்.

குமரி மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் பலரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு குமரி மாவட்டத்திற்குள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. பெரும்பாலான போலீசாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த போலீசார் அனைவரும் நேற்று இங்கிருந்து புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள்.

Tags:    

Similar News