ஒழுகினசேரியில் இன்று காலை விபத்து - பர்னிச்சர் கடைக்கு புகுந்த டெம்போ
- ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
- காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை
நாகர்கோவில் :
நாகர்கோவில் ஒழுங்கினசேரி பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று இரவு படுத்து தூங்கினார்கள். இன்று காலையில் கண்விழித்து ஒரு சில தொழிலாளர்கள் டீ குடிக்க சென்றனர். ஒரு சில தொழிலாளர்கள் கடை பின்பு தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து அப்டா மார்க்கெட் நோக்கி வந்த டெம்போ ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது கடையின் முன்பு படுத்திருந்த தொழிலாளர்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள். இதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.
படுகாயம் அடைந்த அவரைமீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் படுகா யம் அடைந்தவர் மதுரை சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்துள்ளது. விபத்தில் சிக்கிய டெம்போ நாகர்கோவில் பகுதியில் உள்ள பன்றிபண்ணைக்கு கேரளாவில் இருந்து தீவனத்தை கொண்டு வந்த போது பிரேக் பிடிக்காததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது தெரிய வந்துள்ளது.
காலை நேரத்தில் விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதிகாலை நேரத்தில் நடந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்தில் சிக்கிய டெம்போவை போக்குவரத்து போலீசார் கடைக்குள் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.