மருந்துவாழ்மலையில் ஜோதிலிங்கேஸ்வரருக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
- பக்தர்களுக்கு 7 வகையானபிரசாதம் வழங்கப்பட்டது
- 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்துள்ளது. இங்கு உள்ள மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும், மூலவரான ஜோதிலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சன பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார்.
பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல், கொண்டை கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார்சாதம் போன்ற 7 வகையான அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டன.