இரணியல் அருகே அதிகாரி வீட்டில் பணம்- பொருட்கள் கொள்ளை
- பூட்டை உடைத்து மர்ம நபர்கள் துணிகரம்
- ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரம்
இரணியல் :
இரணியல் அருகே உள்ள நுள்ளிவிளையை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் கார்த்திக் (வயது 32). இவர் பெங்களூரூவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
பெற்றோர் இறந்து விட்டதால் வீட்டில் கார்த்திக் தனியாக வசித்து வந்தார். கடந்த மாதம் 9-ந் தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூர் சென்று விட்டார். தீபாவளி பண்டிகையை கொண்டாட கார்த்திக் சம்பவத்தன்று ஊருக்கு வந்தார்.
வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்ற அவர், அங்கு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அந்த கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பதும் தெரிய வந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கை கடிகாரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.