நாகர்கோவிலில் பிரபல கொள்ளையன் கைது
- 20 பவுன் நகை மீட்பு
- இவருக்கு வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். நாகர்கோவில் கோட்டார், வடசேரி போலீஸ் சரக்கத்துக்குட்பட்ட பகுதிகளிலும் வீட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்தது.
இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த சரண் (வயது 23) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.
சரணை போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வடசேரி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் பார்வதிபுரம் பகுதியிலும் அவர் கைவரிசை காட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சரணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது. இவருக்கு வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.