உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் அரசு பஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும்

Published On 2023-11-22 06:33 GMT   |   Update On 2023-11-22 06:33 GMT
போக்குவரத்து கழக பொது மேலாளரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை

நாகர்கோவில் :

நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள திருநெல்வேலி கோட்ட பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தியை சந்தித்து விஜய்வசந்த் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வதற்கும், மக்கள் வெளியிடங்களுக்கு பயணிக்கவும், மருத்துவமனைகளுக்கு செல்லவும், அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர். மக்கள்தொகை பெருகி வருவதால் இப்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் மற்றும் முக்கிய நகரங்களை கிராமங்களுடன் இணைக்கும் வகையில் பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாத நிலை உள்ளது. ஆகையால் அனைத்து ஊர்களில் இருந்தும் நாகர்கோவில் செல்லவும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்லவும் அதிக பேருந்து சேவைகள் தேவை.

ஏராளமான வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துக்குள் தக்க காரணமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஊர்களுக்கு பேருந்து வசதிகள் தடையின்றி கிடைக்க ஆவன செய்ய கேட்டுகொண்டார். கடற்கரை கிராமங்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையோடு இணைக்கும் வகையில் புதிய பேருந்துக்களின் தேவையை விளக்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள மருத்துவ கல்லூரி, ஆர்.சி.சி., ஸ்ரீ சித்திரை மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளுக்கு சிகிச்சை தேடி செல்கின்றனர். அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து பேருந்து மாற வேண்டிய கட்டாயம் தற்பொழுது உள்ளது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரிக்கு நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களுக்கும், வேளாங்கண்ணி, பழனி போன்ற சுற்றுலா தலங்கள் செல்லவும் போதிய பேருந்து வசதிகள் இல்லை. அதற்கு ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கைகள் முன்வைத்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் பேருந்துங்கள் பழுதடைந்த நிலையில் சாலைகளில் பயணிக்கிறது. அதற்கு பதிலாக நல்ல நிலையில் இயங்கும் பேருந்துங்கள் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News