உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் பிரபல நிறுவனத்தின் உணவு பொருட்களை போலியாக தயாரித்தவர் மீது வழக்கு

Published On 2022-09-18 09:58 GMT   |   Update On 2022-09-18 09:58 GMT
  • மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
  • மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை

நாகர்கோவில்:

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே மேவலூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 40). இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான பிரபல உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தமிழக பிரிவின் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறேன். எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் பிரபலமாகும். முறையாக காப்புரிமை பெற்று பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலனுக்காக உணவு பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.

இந்த நிலையில் எங்களது உணவுப் பொருட்களின் தயாரிப்புகளை குமரி மாவட்டத்தில் போலியாக ஆலை நடத்தி தயார் செய்து எங்களது நிறுவனத்தின் போலியான முத்திரையை பயன்படுத்தி தரமற்ற முறையில் பொருள்களை விற்பனை செய்து எங்களது நிறுவனத்திற்கு களங்கம் விளைவித்து, தவறான ஆதாயம் பெற்றுள்ளனர்.

எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தர விட்டார்.

அதன் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி, குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த ரெஜி (34 ) என்பவர் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News