உள்ளூர் செய்திகள்

திருட்டு நடந்த கோவிலை படத்தில் காணலாம். 

கொல்லங்கோடு அருகே கோவிலை உடைத்து கொள்ளை

Published On 2022-12-05 13:12 IST   |   Update On 2022-12-05 13:12:00 IST
  • லட்சக்கணக்கான பொருட்களை அள்ளி சென்றதால் பரபரப்பு
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

கொல்லங்கோட்டை அடுத்த நடைக்காவு அருகே வில்லுவிளையில் பிரசித்தி பெற்ற இசக்கி அம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் காலை, மாலை வேளைகளில் பூஜை நடப்பது வழக்கம். நேற்று மாலை கோவிலில் பூஜை முடிந்து பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கோவில் நடையில் வைத்திருந்த 8 அடி நீளமுள்ள நிலவிளக்கு திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் கோவிலுக்கு தேவையான பொருட்கள் வைக்கும் அறையை உடைத்து 27 நிலவிளக்குகள் மற்றும் கோவிலுக்கு தேவையான வெள்ளி தட்டுகள் மற்றும் ஏராளமான வெண்கல பாத்திரங்களும் திருடப்பட்டிருந்தது.

இதன் மொத்த மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் திருட்டுப்போனது குறித்து பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். நிர்வாகிகள் நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஏதோ மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நித்திரவிளை போலீஸ் நிலையத்திற்குக்குட்பட்ட பகுதியில் சில நாட்களாக தொடர்ச்சியாக பல இடங்களில் செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களும் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News