உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இந்திய கப்பற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி

Published On 2023-01-23 08:39 GMT   |   Update On 2023-01-23 08:39 GMT
  • குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) தகவல்
  • பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகை வழங்கப்படும்.

கன்னியாகுமரி:

குளச்சல் கடலோர பாதுகாப்பு குழுமம் (மரைன் போலீஸ்) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும் இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு வழிகாட்டுதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரிய நிதி ஒப்பளிப்பு அரசாணை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நடத்தி முடிக்கப்பட்டது. 9-வது அணிக்கான 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் நடத்தப்பட உள்ள 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி உள்ள மீனவர் வாரிசுகளிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்பந்தப் பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலு வலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அலுவல கங்களில், இருந்தும் மேலும் மீனவர் கிராம கூட்டுறவு சங்கங்கள், நியாய விலை கடைகள் ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக் கொள்ளவும்.

இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி மாத பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து 3 மாத காலத்திற்கு கடலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகாமையில் உள்ள பயிற்சி மையத்திற்கு அனுப்பப்படுவார். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம் பயிற்சி கால ஊக்க தொகையும் வழங்கப்படும்.

எனவே 12-ம் வகுப்பு தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத் தொகையில் 50 சத வீதத்திற்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக 50 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர் வாரிசுகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News