மார்த்தாண்டம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
- ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
- பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்
நாகர்கோவில்:
கோழிப்போர் விளையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இவரை ஆட்டோ டிரைவர் சுஜின் என்பவர் அழைத்து செல்வார்.
சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்தது. இது குறித்து தாயார் சிறுமியிடம் கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் சுஜின் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரத்தை தெரிவித்தார். இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக சிறுமி கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சுஜின் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாகியுள்ள சுஜினை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 8 வயது சிறுமிக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.