உள்ளூர் செய்திகள்

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- ரூ.11.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

Published On 2022-09-13 09:27 GMT   |   Update On 2022-09-13 09:27 GMT
  • பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்
  • முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கை, கால் இயக்க குறைபாடுள்ள 7 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.11,24,000/- மதிப்புள்ள நவீன செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மேலும் கேட்புதிறன் குறைபாடுள்ள 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13,900/- மதிப்புள்ள காதொலி கருவிகள் மற்றும் மக்கள் குறை தீா்க்கும் நாளில் மனு வழங்கிய காஞ்சிபுரம் வட்டம் நாியம்புதூர் கிராமத்தை சோ்ந்த மீனா என்கிற பழங்குடி இனத்தை சோ்ந்த பெண்ணுக்கு ரூ.5,000/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கு.பிரகாஷ் வேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News