சேத்தியாத்தோப்பில் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கடலூர்:
சேத்தியாத்தோப்பு தெற்கு மெயின்ரோட்டில் வசிப்பவர் பூவாராகசாமி மகன் சந்துரு (வயது 45). இவர் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். மீதமுள்ள கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீடு சேதமடைந்துள்ளதால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு, காலியாக உள்ள மற்றொரு கடையில் தனது மனைவி, மகனுடன் தங்கினார்.இன்று காலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. அதேபோல வீட்டிற்குள் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஐந்தரை பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.மேலும், வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் வீட்டிற்குள் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றுள்ளதையும் கண்டார். இது தொடர்பாக சந்துரு சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.சேத்தியாத்தோப்பு நகரின் மையப்பகுதியில் கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.