உள்ளூர் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கை தேடும் போலீசார்

Published On 2024-02-26 09:13 GMT   |   Update On 2024-02-26 09:13 GMT
  • ஜாபர் சாதிக் சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார்.
  • 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.

சென்னை:

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அனைத்து மாநில போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கடத்தப்படுவதாக அந்த நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடியாக களத்தில் இறங்கினார்கள். அவர்கள் மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். கடந்த 15-ந்தேதி நடந்த இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.

இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப் பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.

இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) என்பவர் முக்கிய மூளையாக செயல்பட்டிருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். சென்னை புரசைவாக்கத்தில் விடுதி நடத்தி வருகிறார். பிரபல அசைவ ஓட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் நடத்தி வருகிறார். அதன்பிறகு சினிமா தயாரிப்பாளராக மாறிய இவர் மங்கை என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு தமிழ் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர். அரசியல் களத்திலும் அவர் பிரபலமாக நபராக இருந்து வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதன் அடிப்படையிலேயே அவர் பல படங்களை தயாரித்து வந்துள்ளார். கைதான 3 பேரிடம் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலுக்கு தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் முக்கிய மூளையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை முக்கிய குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசுக்கு இந்தியா முழுவதும் கிளைகள் உள்ளன. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்த பிரிவானது தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் போதைப்பொருளை தடுத்து வருகிறார்கள்.

டெல்லியை சேர்ந்த அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் தமிழகத்தை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய 3 தென் மாநிலங்களில் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் பதுங்கி இருக்கிறாரா என்று தேடி வருகிறார்கள்.

மேலும் அவர் சென்னையில் உள்ள நண்பர்கள் வீட்டில் பதுங்கி இருக்கலாமா என்றும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அவரை கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவரது செல்போன் எண் மூலமாக அவர் யார் யாருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்றும் துப்பு துலக்குகிறார்கள். மேலும் அவர் நீண்ட நேரமாக யாருடன் பேசியுள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் திரட்டி வருகிறார்கள். சர்வதேச அழைப்பில் யாரிடமாவது பேசியுள்ளாரா என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

போதைப்பொருள் கடத்தலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை தீவிரம் அடையும் பட்சத்தில் ஜாபர் சாதிக் உள்பட அவரது கூட்டாளிகள் மேலும் பலர் டெல்லி போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன் அவரது வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News