உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே 25 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ஐ.டி. ஊழியர்

Published On 2023-04-13 14:40 IST   |   Update On 2023-04-13 14:40:00 IST
  • மேட்டுப்பாளையம்- கோத்தகிரி இடையே உள்ள காட்சி முனையை ஐ.டி. ஊழியர் பிரீதம் ரசித்து கொண்டிருந்தார்.
  • 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த பிரீதமை மீட்டனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை பீளமேடு அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரீதம் (வயது 21). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு சென்றார்.

செல்லும் வழியில் கோத்தகிரி -மேட்டுப்பாளையம் இடையே உள்ள காட்சி முனையில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் 25 பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று காட்சி முனையில் இருந்து தவறி விழுந்த பிரீதமை தேடினர். 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த அவரை மீட்டனர்.

பின்னர் மீட்கப்பட்ட பிரீதமை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News