தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வு
- பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது.
- கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த தீயணைப்புத்துறை இயக்குநர் ரவி வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை அவ்வபோது பெய்து வருகிறது. இந்த நிலையில் தீயணைப்புத்துறை சார்பாக மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார்.
தீயணைப்பு நிலையத்தில் மரம் வெட்டும் கருவி, கட்டிடம் இடிக்கும் கருவி, ஆபத்து காலத்தில் கதவுகளை உடைக்கும் கருவி உள்ளிட்ட நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர் கூறுகையில்;
நாகை மாவட்டத்தில் 7 தீயணைப்பு நிலையங்களில், 7 மீட்பு படையினர், 160 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மழை காலங்களில் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது, பேரிடர் காலத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருது மற்றும் வெகுமதி கட்டாயம் உண்டு. மேலும், சுற்றுலா தலங்களாக விளங்கும் வேளாங்கண்ணி, நாகூர், தரங்கம்பாடி, பூம்புகார் ஆகிய கடல் பகுதியில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கவச உடை அணிந்த நீச்சல் வீரர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.