உள்ளூர் செய்திகள்

கோடை வெயில் அதிகரிப்பு- ஒருகிலோ எலுமிச்சை ரூ.120க்கு விற்பனை

Published On 2023-04-09 06:58 GMT   |   Update On 2023-04-09 06:58 GMT
  • கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
  • வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது.

போரூர்:

சென்னையில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.

கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கடைகளில் விற்கப்படும் இளநீர், சர்பத், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.

இதில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படும் எலுமிச்சை பழம் உடலுக்கு நல்லது என்பதால் பொதுவாகவே கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கூடுர் மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 50 முதல் 60 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது.

கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.

இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையிலும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் 3 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது. கோடை வெயிலையொட்டி ஏராளமான குளிர்பான கடைகள் சாலை யோரங்களில் முளைத்து உள்ளன.

Tags:    

Similar News