உள்ளூர் செய்திகள்

பேருந்துக்கு கரும்பு, மாலை அணிந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.

போளையம்பள்ளி பகுதியில் இருந்து இன்று முதல் அரசு பேருந்து இயக்கம் தருமபுரி கலெக்டர் நடவடிக்கை

Published On 2023-03-08 10:26 GMT   |   Update On 2023-03-08 10:26 GMT
  • மாரப்ப நாயக்கன்பட்டி, பொம்மட்டி போளையம் பள்ளி வழியாக இன்று பேருந்து இயக்கப்பட்டது.
  • இந்த பேருந்தை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கரும்பு மற்றும் மாலை உள்ளிட்ட தோரண அலங்காரத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

தருமபுரி,

தருமபுரி-அரூர் தேசிய நெடுஞ்சாலையில், செல்லும் வழியில் உள்ள கோபிநாதம்பட்டி கூட்டுரோடு சாலையில் இருந்து போளையம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மாரப்பநாயக்கன்பட்டி, போளையம்பள்ளி, பொம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.

இந்த கிராம வாசிகளுக்கு பிரதான தொழில் விவசாயம். காய்கறி, பூ, கீரை போன்றவை, இங்கு பயிரிடப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லுாரி செல்ல, கோபிநாதம்பட்டி கூட்டு ரோடு பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும்.

அதுமட்டுமின்றி குறிப்பாக 11 மற்றும் 12 வகுப்பு படிக்கக் கூடிய மாணவ மாணவிகள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள R.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் நடந்தே சென்று படித்து வருகிறார்கள்.

இதனால் தங்களது வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்குள் புறப்பட வேண்டியுள்ளதால் சில வீடுகளில் காலையில் உணவு சமைப்பதற்கு காலத்தாமதம் ஆவதால் மாணவ, மாணவிகள் சாப்பிடாமலே பள்ளிக்கு நடந்து சென்று காலையில் நடைபெறு கின்ற பிரார்த்தனை கூட்டத்தில் மயங்கி விழுகின்ற நிலைமையும் அடிக்கடி நிகழ்கிறது.

எனவே மாலை 5 மணிக்கும், காலை 8 மணியளவில் அரசு பேருந்து ஒன்றை (நவலை, சின்னாகவுண்டம்பட்டி, பொம்பட்டி, போளையம்பள்ளி, கோபிநாதம்பட்டி வழியாக தருமபுரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு வழங்கினர்.

எனவே பள்ளி மாணவர்களுக்கு சில நாட்களில் பொது தேர்வு நடைபெற உள்ளதால் அதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி மாலை மலர் நாளிதழில் கடந்த 21-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இன்று தருமபுரி- மொரப்பூர் சாலை ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியில் இருந்து மாரப்ப நாயக்கன்பட்டி, பொம்மட்டி போளையம் பள்ளி வழியாக இன்று பேருந்து இயக்கப்பட்டது.

இந்த பேருந்தை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கரும்பு மற்றும் மாலை உள்ளிட்ட தோரண அலங்காரத்துடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர். மேலும் பேருந்து இயக்க உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் சாந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News