கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஐ.இ.எல்.சி பார்வையற்றோர்களுக்கான சிறப்பு பள்ளியில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு காதொலி கருவி, வங்கிகடன் மற்றும் சக்கர நாற்காலிகளையும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வழங்கினார். அருகில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் உள்ளார்.
பர்கூரில் 196 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சம் நலத்திட்ட உதவிகள்
- நல்லாட்சி வாரம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
- விதவை உதவித்தொகை என 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில் முதல்வரின் முகவரித்துறை சார்பாக நல்லாட்சி வாரம் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாற்றுத்திறனா ளி களுக்கான உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 196 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், பர்கூர் தாசில்தார் பன்னீர் செல்வி, பர்கூர் தனி தாசில்தார் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, வெங்கட்ராம கணேஷ், துணை தாசில்தார் பத்மா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.