உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தினால் பா.ம.க. போராடும்-தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published On 2023-06-05 10:02 GMT   |   Update On 2023-06-05 10:02 GMT
  • கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது. ஆனால் நமக்கு மேட்டூர் அணை ஒன்று தான் உள்ளது.
  • அணை கட்டுவதை தடுத்து நிறுத்தனும். தமிழ்நாடு அதை எதிர்க்கனும்.

தருமபுரி,

தருமபுரி, அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் ஏ.எம்.ஆர் கிரிக்கெட் போட்டி கடந்த 15 தினங்களாக தருமபுரியில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணிகளின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி போட்டியை எம்பி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

விழாவில் டாக்டர்அன்புமணி ராமதாஸ் எம்.பி. மாவட்ட மற்றும் மைய அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பேசினார்.

அதன்படி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், 2-வது பரிசாக ரூ.1 லட்சம், 3-வது பரிசாக 2 அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டன.

மேலும் மைய அளவில் முதலிடம் பிடித்த அணிக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

கோடை விடுமுறை காலத்தில் இளைஞர்கள் திசை மாறி போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதேப்போல் மற்ற போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றினால், நீராதாரம் பெருகும், வேலை வாய்ப்பு உருவாகும். வெளியூர் வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வருவார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான் மின் கட்டணம் உயர்த்தியது. தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்த்துவதாக தெரிவித்திருக்கிறார்கள் அவ்வாறு உயர்த்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை பாமக எதிர்த்து போராடும்.

மேகதாது அணை கட்டும் முயற்சியை கர்நாடக மேற்கொண்டு வருகிறது. இதே நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தான், அணை கட்ட நிதி ஒதுக்கி, பல அரசியல் செய்தார். அவர்கள் சொல்வதை நாம் நம்ப கூடாது. கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது. ஆனால் நமக்கு மேட்டூர் அணை ஒன்று தான் உள்ளது. இந்த அணை கட்டுவதை தடுத்து நிறுத்தனும். தமிழ்நாடு அதை எதிர்க்கனும்.

இந்தியா முழுவதும், 40 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 170 மருத்துவ கல்லூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை மோடி அனுமதிக்க கூடாது.

இந்தியாவிற்கு இன்னும் 10 லட்சம் மருத்துவர்கள் தேவை இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியம் விளைவது தருமபுரி தான், ஆனால் சிறுதானியத்தை கர்நாடகாவில் வாங்குவது சரியில்லை.

ஒடிஷா ெரயில் விபத்திற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ெரயில்வே துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுப் போன்ற விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்லட் ெரயில் கொண்டு வருவதை விட, பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்நுட்பத்தினை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News