உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை திட்டிய கணவர் கைது

Published On 2023-07-10 07:22 GMT   |   Update On 2023-07-10 07:22 GMT
  • சிவா, சுரேஷ் வீட்டிற்கு வந்து பரமேஸ்வரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
  • சிவாவை அசிங்கமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

விழுப்புரம்:

செஞ்சி அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றால் என்ற ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (29). கடந்த 7-ந்தேதி சுரேஷ் வேலைக்கு சென்றவுடன் பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவா, சுரேஷ் வீட்டிற்கு வந்து பரமேஸ்வரியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

தண்ணீர் எடுத்து வர பரமேஸ்வரி சென்றார். அவரை பின்தொடர்ந்த சிவா, பரமேஸ்வரியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அப்போது பரமேஸ்வரி கூச்சலிடவே, சிவா தப்பியோடியதாக தெரிகிறது. இது குறித்து நல்லான்பிள்ளைபெற்றால் போலீசில் பரமேஸ்வரி புகார் அளித்தார்.சப்-இன்ஸ்பெக்டர் சையது முகமது அலி வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவாவை தேடி வந்தார்.


இந்நிலையில் நேற்று சிவாவை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து கொண்டு இருந்தனர். இத்தகவல் அறிந்த பரமேஸ்வரியின் கணவர் சுரேஷ் டாஸ்மாக்கிற்கு சென்று மது அருந்தினார். குடிபோதையில் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சிவாவை அசிங்கமாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கிருந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலைய எழுத்தர் புவனேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நல்லான் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News