உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகராட்சியில் கூட்டம் நடந்த காட்சி.

ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம்: அனைத்து வார்டு பகுதிகளிலும் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்- மேயர் சத்யா பதில்

Published On 2022-06-14 13:34 IST   |   Update On 2022-06-14 13:34:00 IST
  • அனைத்து பகுதிகளிலும் எல். இ.டி. பல்புகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஓசூரில், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

ஓசூர், 

ஓசூர் மாநகராட்சி அவசர கூட்டம், மாமன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், எதிர்கட்சி தலைவர் நாராயணன், மண்டல தலைவர்கள் ஜெயப்பிரகாஷ், புருஷோத்தம ரெட்டி, மற்றும் சிவராமன், மஞ்சுநாத், ஸ்ரீதர் உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்களும், நிலைக்குழு தலைவர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா மற்றும் யசஷ்வினி மோகன், நாகராஜ், மாரக்கா உள்ளிட்ட தி.மு.க.கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பகுதி தேவைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு விரிவாக பேசினார்கள்.

கூட்டத்தில் பேசிய மேயர் சத்யா, மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளிலும் படிப்படியாக திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். மேலும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் எல். இ.டி. பல்புகளை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி வார்டு பகுதிகளில் பணிகளுக்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறது. ஓசூரில், பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.

தேர்பேட்டையில் உள்ள தெப்பக்குளம், இந்து அறநிலையத்துறையின் கீழ் வருவதால், மாநகராட்சி சார்பில் அதனை சுத்தம் செய்யவோ, தூர்வாரவோ இயலாது. ஓசூர் பஸ் நிலையம் அருகேயுள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தை இடித்து, ரூ.18 கோடி மதிப்பில் வணிக வளாகம் கட்டவும், வசந்த்நகர், எம்.ஜி.ஆர்.மார்க்கெட் மற்றும் பழைய பெங்களூரு சாலையில், பழைய பஸ் நிலைய பகுதியில் மற்றும் எம்.ஜி.ரோட்டில் காந்தி சிலை பின்புறம் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வணிக வளாகங்களை அமைக்க அரசுக்கு, முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.

மழைக்காலத்திற்கு முன்பாகவே, அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மேலும், உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் விரிவாக விளக்கமளித்து, பேசினார். இந்த கூட்டத்தில், மொத்தம் 154 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News