தேர்பவனி நடந்தது.
புனித வியாகுல அன்னை ஆலய தேர்பவனி
- ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்காரத்தெருவில் உள்ள புனித வியாகுல அன்னை ஆலயம் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயத்திற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை திருமணம் ஆகாத பெண்கள், கர்ப்பிணி பெண்கள் வந்து குத்துவிளக்கிற்கு எண்ணெய் ஊற்றி சென்றால் கேட்டவரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வழிபட்டு செல்கின்றனர்.
இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் நவநாள் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான வியாகுல அன்னை தேர்பவனி நேற்றுஇரவு நடைபெற்றது. முன்னதாக திருவிழா கூட்டுப்பாடல் திருப்பலி மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தை பிரவீன் மற்றும் குருக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர்கள் புனிதம் செய்யப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. முதலாவதாக மைக்கேல் சம்மனசு தேரும், தொடர்ந்து புனிதசவேரியார், புனிதசூசையப்பர், புனிதஅந்தோணியார் சொரூபங்களை தாங்கிய தேரும், இறுதியாக வியாகுல அன்னை தேரும் பவனியாக வந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் எரியும் மெழுகுவர்த்தியுடன் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பா டுகளை உதவி பங்குதந்தை பிரவீன் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட், செயலாளர் குழந்தைராஜ், பக்த சபைகள், அன்பிய பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.