மீஞ்சூர்-தச்சூர் கூட்டுச்சாலையில் கனரக வாகனங்கள் செல்ல இன்று முதல் கட்டுப்பாடு
- பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.
- விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
பொன்னேரி:
காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் மற்றும் அதானி துறைமுகம், மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை, பெட்ரோலிய நிறுவனம் தனியார் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்டச்சாலை வழியாக வந்து செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் அவ்வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்பதால் மீஞ்சூர் நகரம் வழியாக பொன்னேரி நகரை கடந்து தச்சூர் வழியாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. இதனால் பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் மீஞ்சூர்- தச்சூர் கூட்டுச்சாலையில் பொன்னேரி வழியாக செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடுகள் விதித்து பொன்னேரி வருவாய் கோட்ட சார் ஆட்சியர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பொன்னேரி அருகே உள்ள கண்டெய்னர் யார்டிற்கு செல்லும் வாகனங்கள் மட்டும் மதியம் 12 பணி முதல் 4 மணி வரை அனுமதிக்கப்படும்.
விதிமுறைகளை பின்பற்றாத கனரக வாகன ஓட்டிகளுக்கு முதற்கட்டமாக ரூ. 500 முதல் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வட்டாட்சியர் செல்வக்குமார் தெரிவித்து உள்ளார்.