உள்ளூர் செய்திகள்

பணம் கேட்டு தொல்லை- தொழிலாளியை கத்தியால் குத்திய முன்னாள் காதலி

Published On 2023-02-05 09:01 GMT   |   Update On 2023-02-05 09:01 GMT
  • சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
  • ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார்.

கோவை:

கோவை அன்னூர் அருகே உள்ள ஒற்றர்பாளையத்தை சேர்ந்தவர் 25 வயது தொழிலாளி.

இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் வாலிபர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து வாலிபர் தனது காதலியிடமும் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதித்தார்.

மேலும் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்குமாறு, வாலிபரிடம் இளம்பெண் தெரிவித்தார்.

இதையடுத்து வாலிபர், பெண்ணின் வீட்டிற்கு சென்று, நானும், உங்களது மகளும் விரும்புகிறோம். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறோம். எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டுள்ளார்.

ஆனால் இளம்பெண்ணின் வீட்டார் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வாலிபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் தனது முன்னாள் காதலியுடன் தொடர்பில் இருந்து வந்தார். மேலும் வாலிபர், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து, அவரிடம் பணமும் வாங்கி வந்தார்.

நேற்றிரவு வாலிபரும், இளம்பெண்ணும் அன்னூர் பகுதியில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

அப்போது வாலிபர் ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு வாக்குவாதமாக மாறி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

ஆத்திரம் அடைந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வாலிபரை கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். மேலும் வாலிபர், இளம்பெண்ணையும் தாக்கினார்.

இவர்களது சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News