உள்ளூர் செய்திகள்

குட்கா வியாபாரி பொன்ராஜ்

குட்கா வியாபாரி கைது- மோட்டார் சைக்கிளுடன், பதுக்கி வைத்திருந்த 180 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-12-03 14:53 GMT   |   Update On 2022-12-03 14:53 GMT
  • ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
  • ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிப்பு

ஊத்துக்கோட்டை:

தமிழக அரசு குட்கா,புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்ரடெண்ட் சி.பாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் சிறப்பு காவல்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா,புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வருகின்றனர்.

இந்நிலையில்,நேற்று மாலை சிறப்பு காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா,முருகவேல்,தலைமை காவலர்கள் கமலக்கண்ணன்,தமிழரசன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னம்பேடு கிராமம்,பெரிய காலனி அருகே வாகனங்களை கண்காணித்து வந்தனர்.

அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பையில் இருபது கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பொன்ராஜ் (வயது48) என்பதும், திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. 


மேலும் சின்னம்பேடு ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பல்வேறு கடைகளில் விற்பனை செய்வதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏரியில் பதுக்கி வைத்திருந்த குட்கா,புகையிலை உள்ளிட்ட 180 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த ஆரணி காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து, குட்கா வியாபாரி பொன்ராஜை கைது செய்ததுடன், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News