உள்ளூர் செய்திகள்

கணவரை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்-ஜெகன் உறவினர்கள் கோரிக்கை

Published On 2023-03-24 15:52 IST   |   Update On 2023-03-24 15:52:00 IST
  • முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
  • இதை போல கவுரவக்கொலைகள் தமிழ்நாட்டில் எங்கும் நடக்க கூடாது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 28). இவரும், அவதானப்பட்டி முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சங்கர் மகள் சரண்யாவும் கடந்த ஜனவரி மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் சிலர் கடந்த 21-ந் தேதி ஜெகனை வெட்டிக்கொலை செய்தனர். இதையடுத்து சங்கர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். முரளி, நாகராஜ் ஆகிய 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில் ஜெகனின் மனைவி சரண்யா கண்ணீர் மல்க கதறிய படி நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-

எனக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை. இதற்குள் இப்படி ஆகி விட்டது. நான் திருமணமாகி சென்ற நாள் முதல் எனது வீட்டு ஞாபகம் வந்தால் தனிமையில் அழுவேன்.

அப்போது என்னை சமாதானப்படுத்தி என்னுடன் சேர்ந்து எனது கணவரும் அழுவார். அவர் என்னை ராணி மாதிரி பார்த்து கொண்டார். அப்படிப்பட்டவரை அநியாயமாக கொன்று விட்டார்களே. அதற்கு என்னை கொலை செய்திருக்கலாமே. ஜெகனை மறக்க சொல்லி எனது தாய் என்னை எட்டி உதைத்த போதும், சித்ரவதை செய்தபோதும் பொறுத்து கொண்டு திருமணம் செய்தேன். எனது வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். இந்த கொலையில் தொடர்புடைய எனது தந்தை உள்பட அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல ஜெகனின் தந்தை சின்னபையன், சித்தப்பா சின்னசாமி ஆகியோர் கூறுகையில், இதை போல கவுரவக்கொலைகள் தமிழ்நாட்டில் எங்கும் நடக்க கூடாது. மேலும் கணவரை இழந்து தவிக்கும் அந்த பெண்ணுக்கு அரசு வேலையும், நிவாரணமும் கிடைக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News