உள்ளூர் செய்திகள்

2 வாலிபர்களை மதுபாட்டிலால் தாக்கிய நண்பர்

Published On 2023-04-13 10:12 GMT   |   Update On 2023-04-13 10:12 GMT
  • திம்மராஜ் குடிபோதையில் சக்திவேலின் உறவினர் பெண்ணுடன் போனில் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.
  • சக்திவேல் கண்டித்து திம்மராஜூடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காலிங்கவரம் அருகே பொன்னல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் சக்திவேல் (வயது 29).

அதே பகுதியைச் சேர்ந்த திம்மராஜ் (26), செந்தில்குமார் (32) ஆகியோர் சக்திவேலின் நண்பர்கள் ஆவார்.

சம்பவத்தன்று சக்திவேல், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மது குடித்தார்.

அப்போது திம்மராஜ் குடிபோதையில் சக்திவேலின் உறவினர் பெண்ணுடன் போனில் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார். இதனை சக்திவேல் கண்டித்து திம்மராஜூடன் வாய் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த திம்மராஜ் அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து சக்திவேலை தாக்கினார். இதனை தடுக்க வந்த செந்தில்குமாரையும் அவர் தாக்கினார். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் அலறி துடித்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து சக்திவேல் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திம்மராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News