உள்ளூர் செய்திகள்

குடிபோதையில் திருட வந்ததையே மறந்தனர்: கோவிலுக்குள் தூங்கிய 2 கொள்ளையர்கள் சிக்கினர்

Published On 2023-02-27 06:51 GMT   |   Update On 2023-02-27 06:51 GMT
  • கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு 2 ஆசாமிகள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
  • திருட வந்து போதையில் கோவிலுக்குள்ளேயே தூங்கி திருடர்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி:

தருமபுரி அடுத்துள்ள மான்காரன் கொட்டாய் கிராமத்தில் சிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் வழியாக இன்று காலை சென்றவர்கள் கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு 2 ஆசாமிகள் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவிலுக்கு அருகே கட்டப்பட்டு வரும் பள்ளி கூடத்தில் பொருட்களை திருட நேற்று முன்தினம் வந்ததாகவும், நாய்கள் குரைத்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டதாகவும் கூறினர்.

நேற்று இரவு கோவிலில் திருட முயற்சி செய்து பூட்டை உடைத்தபோதும் அப்பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து குரைத்ததால் வெளியே வர பயந்து கொண்டு கோவிலுக்குள்ளேயே இருந்ததாகவும், பின்னர் குடிபோதையில் தூங்கி விட்டதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்த இருவரிடமும் அவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருட வந்து போதையில் கோவிலுக்குள்ளேயே தூங்கி திருடர்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News