பென்னாகரம் வனப்பகுதிகளில் 4 யானை தந்தங்களை தீவைத்து அழித்த வனத்துறையினர்
- பென்னாகரம் வனப்பகுதிகளில் யானைகளின் 4 தந்தங்களை தீவைத்து வனத்துறையினர் அழித்தனர்.
- உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்த யானைகளை பிரேத பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்து எடுத்து தனியாக எடுத்து வைக்கப்பட்ட தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் முன்னிலை எரிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் யானை கூட்டங்கள் அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக கோடை காலங்களில் வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் குடிநீருக்காக யானைகள் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உடல் நிலை பாதிப்பால் உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அதனுடைய பிரேத பரிசோதனையின்போது அறுவை சிகிச்சை செய்து எடுத்து தனியாக பாதுகாக்கபட்டு வந்தது. அதனை தீயிட்டு அழிக்க தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு தலைமையில் வனத்துறையினர் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிகளில் பாதுகாக்கபட்டு வந்த யானைகளின் 4 தந்தங்களை நேற்று தீயிட்டு எரித்து அழித்தனர். அப்போது வனத்துறையினர் மற்றும் வன உயிரின காப்பாளர்கள் உடனிருந்தனர்.