உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் ஐ.வி.டி.பி. நிறுவனர் குழந்தைபிரான்சிஸ் தலைமையில் நடந்த விழாவில் ரூ.52 லட்சம் மதிப்பிலான ஐ.வி.டி.பி. கோசலை விருதினை நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், சியோன்மலை ஆரோக்கிய அன்னை முதியோர் இல்ல இயக்குனர் இருதயராஜ் உள்ளிட்டோர் வழங்கினர்.

கிருஷ்ணகிரியில் ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.52 லட்சம் மதிப்பில் கோசலை விருது- ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது

Published On 2022-08-01 14:29 IST   |   Update On 2022-08-01 14:29:00 IST
  • கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
  • விழாவினையொட்டி, கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், அனுபவ பகிர்வுகளும் நடந்தது.

கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 16 ஆண்டுகளாக ஐ.வி.டி.பி. கோசலை விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான கோசலை விருது வழங்கும் விழா கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு ஐ.வி.டி.பி. நிறுவனத் தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், சியோன்மலை ஆரோக்கிய அன்னை முதியோர் இல்லத்தின் இயக்குனர் இருதயராஜ் ஆகியோர் பங்கேற்று, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 3 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.19,250 மதிப்பிலான 4 கிராம் தங்க நாணயங்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற 5 மாணவர்களுக்கு தலா ரூ.35,250 மதிப்பிலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் மற்றும் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 85 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற 1000 மாணவர்களுக்கு தலா ரூ.4,880 மதிப்பிலான ஒரு கிராம் தங்க நாணயங்களை விருதாக வழங்கினர். இதன் மொத்த மதிப்பு ரூ.52 லட்சம் ஆகும்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் துணை வட்டார மேலாளர் பிரின்ஸ், தமிழ்நாடு கிராம வங்கியின் வட்டார மேலாளர் சீராளன் மற்றும் வங்கி கிளை மேலாளர்கள், ஜாய் ஆலுகாஸ் நிறுவன ஊழியர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கினர்.

இதுவரை ஐ.வி.டி.பி. சோசலை விருது திட்டத்திற்காக மட்டும் ரூ.4.29 கோடி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கல்வி பணிக்காக ரூ.32.97 கோடி வழங்கப்பட்டுள்ளது.

விழாவினையொட்டி, கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், அனுபவ பகிர்வுகளும் நடந்தது. இதில், விருது பெற்ற மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஐ.வி.டி.பி. நிறுவன ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஐ.வி.டி.பி. நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜோஸ்வா மற்றும் நந்தினி ஜோஸ்வா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News