உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே விசைப்படகு மீனவர்கள் அத்துமீறல்: பைபர் படகு மீனவர்கள் போலீசில் புகார்

Published On 2023-07-12 18:30 IST   |   Update On 2023-07-12 18:30:00 IST
  • வெளி மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்களின் வலைகளை அறுத்துவிட்டு வேகமாக சென்றது.
  • சட்டத்தை மீறி வெளிமாவட்ட விசைப்படகு மீனவர்கள் கரையோரம் மீன் பிடிப்பதாக குற்றச்சாட்டு.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் வடக்கு, சதுரங்கப்பட்டினம் தெற்கு மற்றும் மெய்யூர் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுமார் 250 படகுகளில் கரையோரம் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். நேற்று இரவு மீன் பிடிக்க நாட்டுப் படகில் 9 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நண்டு வலைகளை கட்டிவிட்டு கடலில் ஆங்கர் போட்டு நின்று கொண்டிருந்தபோது கரையோரமாக வந்த வெளி மாவட்ட விசைப்படகு ஒன்று வலைகளை அறுத்துவிட்டு வேகமாக சென்றது. அப்போது நண்டு வலை போட்டிருந்த மீனவர்களின் படகு இஞ்சினில் விசைப்படகின் வலைக்கயிறு சிக்கியது. இதனால் படகு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.

இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடற்கரையில் இருந்து 5 முதல் 7 நாட்டிக்கல் மைல் தூரத்தில்தான் மீன் பிடிக்க வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை மீறி கடலூர், நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து கரையோரம் மீன் பிடிப்பதால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தீர்மானம் நிறைவேற்றி காவல்துறைக்கும், மீன்வளத்துறைக்கும் புகார் மனு அளித்தனர். விசைப்படகு மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags:    

Similar News