நெல்லை தாலுகா அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
- மாரிமுத்து குடும்பத்தினருடன் தாலுகா அலுவலகம் எதிர்புறம் தர்ணாவில் ஈடுபட்டார்.
- கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு மாரிமுத்து குடும்பத்தினர் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40). இவரது அண்ணன் மாரிவேல்.
தர்ணா போராட்டம்
விவசாயிகளான இவர்கள் இன்று தங்களது குடும்பத்தினருடன் வந்து நெல்லை தாலுகா அலுவலகம் நுழைவு வாயில் எதிர்புறம் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் சந்திப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கூறியதாவது:-
எங்களது பூர்வீக சொத்து சுத்தமல்லியில் உள்ளது. இதனை எங்களது குடும்பத்தினரும், பெரி யப்பா குடும்பத்தினரும் சரிபாதியாக பங்கிட்டு கொண்டோம். இதற்காக அந்த சொத்திற்கான கூட்டுப்பட்டாவிற்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தோம். பெரியப்பா குடும்பத்தினருக்கு விரைவிலேயே தனிப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் மாதக்கணக்காகியும் எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கேட்ட போதும், அவர்கள் ஆவணங்கள் சரியில்லை என்று அலைக்கழிப்பு செய்தனர்.
ஒரே பட்டாவை கொண்ட பெரியப்பா குடும்பத்தினருக்கு தனிப்பட்டா வழங்கிய போது எங்களுக்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக எங்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.
சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.