உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விலை உயர்ந்த மருந்து

Published On 2023-09-04 16:00 IST   |   Update On 2023-09-04 16:00:00 IST
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு விலை உயர்ந்த மருந்து வழங்கப்பட்டது.
  • கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விலையர்ந்த மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி:

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கடந்த மாதம் 29-ந் தேதியன்று காலை மாதையன்(65) என்பவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது இடது கை, கால் மற்றும் முகம் ஒரு பகுதி 3 மணி நேரமாக செயல் இழந்து இருந்தது. அவரது தலையை உடனடியாக சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டு, மூளையில் உள்ள ரத்த குழாய் அடைப்பை கண்டிறிந்து, ரத்தக்குழாய் அடைப்பை நீக்குவதற்கான விலை உயர்ந்த மருந்து தமிழக அரசால் வழங்கப்பட்டு, அவருக்கு செலுத்தப்பட்டது.

இந்த சிகிச்சையின் பலனாக ரத்தக்குழாய் அடைப்பு நீக்கி இடது கை, கால் பலம் பெற்று முழுவதுமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளார். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களான பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர்.இளங்கோ, நரம்பியல் துறை டாக்டர்.விஷ்ணுராஜ், அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் டாக்டர்.விஜய், டாக்டர்.கோபிநாத், பட்ட மேற்படிப்பு மருத்துவர் டாக்டர்.அரவிந்தன் மற்றும் பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களை கல்லூரியின் முதல்வர் டாக்டர்.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் கூறியதாவது:-

இந்த மருந்தை செலுத்தினால் பலருக்கு நிரந்தர ஊனம் ஏற்படாமல், பெருமளவு தடுக்க முடியும். இத்தகைய உயர்தர உயிர் காக்கும் மருந்து தனியார் மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு சேலம், பெங்களூர் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துக்கு ரூ.35 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இது நமது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் பக்கவாதத்தின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக நமது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து, இந்த உயிர் காக்கும் பக்கவாத சிகிச்சையை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 


Tags:    

Similar News