போக்குவரத்து கழக கிளை மேலாளர்-ஊழியர் மோதல்
- இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
- வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
அந்தியூர்:
அந்தியூர் தவிட்டுப்பாளையம் தென்றல் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (34). இவர் அந்தியூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே கிளையில் வசூல் பிரிவில் அந்தியூர் நகலூரை சேர்ந்த ராமச்சந்திரன் (59) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கிளை மேலாளர் சக்திவேல் தனது வீட்டில் இருந்த போது அங்கு ராமச்சந்திரன் மற்றும் அந்தியூர் காலனியை சேர்ந்த துரையன் ஆகியோர் வந்துள்ளனர். விடுமுறை எடுப்பதற்காக சக்திவேலை தொடர்பு கொள்ள முடியா ததால் ராமச்சந்திரன் நேரில் அவரது வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அலுவலகத்துக்கு வருமாறு சக்திவேல் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அந்தியூர் அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
தொடர்ந்து 2 பேரும் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தியூரில் போக்குவரத்துக் கிளை மேலாளரும், ஊழியரும் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.