உள்ளூர் செய்திகள்

ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது

Published On 2022-06-05 10:15 GMT   |   Update On 2022-06-05 10:15 GMT
  • வரத்து அதிகரித்ததால் ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்தது.
  • வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்தது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது

ஈரோடு:

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தினமும் 7 டன் வரை தக்காளி லோடு வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியது.

இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு 3 ஆயிரம் டன் வரை மட்டுமே தக்காளிகள் விற்பனைக்கு வந்தது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தக்காளி விளைச்சல் ஓரளவு அதிகரித்து வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் கடந்த வாரம் வ.உ.சி. மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.

இந்நிலையில் இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக மாநிலம் கோலார் போன்ற பகுதியில் இருந்து 15 டன் தக்காளி லோடு வந்துள்ளது. இதன் காரணமாக விலையும் கிடுகிடுவென சரிந்துள்ளது.

இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 40-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் வ.உ.சி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் தக்காளி விலை சரிவின் காரணமாக 3 கிலோ, 5 கிலோ என அள்ளி சென்றனர்.

இதனால் இன்று தக்காளி வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News