உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் நெஞ்சுவலி ஏற்பட்ட பெண்ணை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற டிரைவர்

Published On 2022-09-02 09:47 GMT   |   Update On 2022-09-02 09:47 GMT
  • செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது கரட்டூர் பிரிவில் ஏறிய பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
  • மேலும் அந்த பெண்ணை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக சண்முகசுந்தரம் (48), கண்டக்டராக ராஜ்குமார் (50) வேலை பார்த்து வருகிறார்கள்.

நேற்று மதியம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஈரோடு நோக்கி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ், கரட்டூர் பிரிவில் நின்றது, அங்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஏற்றிக்கொண்டு மீண்டும் பஸ் புறப்பட்டது.

பின்னர் பஸ் செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது கரட்டூர் பிரிவில் ஏறிய பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண், நெஞ்சுவலியால் துடிக்க, இதை பார்த்த சக பயணிகள், டிரைவரிடம், தெரிவித்தனர்.

பின்னர் டிரைவர் சண்முகசுந்தரம், 108 ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார். அப்போது, அந்தியூரில் ஆம்புலன்ஸ் இல்லை என்றும், குருவரெட்டியூரில் தான் ஆம்புலன்ஸ் உள்ளது. அங்கிருந்து வர காலதாமதம் ஆகலாம் என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து டிரைவர், பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டு, அந்த பெண்ணை பஸ்சின் கடைசி சீட்டில் படுக்க வைத்துவிட்டு மருத்துவ வல்லுநர்கள் உதவியுடன் முதலுதவி கொடுத்துவிட்டு பஸ்சை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கே அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார்.

தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News