உள்ளூர் செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்

Published On 2023-06-21 09:15 GMT   |   Update On 2023-06-21 09:15 GMT
  • வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
  • பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஈரோடு:

சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தமிழரசி உத்தரவின்படியும், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி அறிவுரையின்படியும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

இது குறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) கடந்த 15-ந் ேததி காணொலி மூலம் நடத்தப்பட்ட கூட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறையில் படிவம் III சான்று பெற்று வெளிமாநில தொழிலாளர்கள் விபரங்களை தொழிலாளர் நலத்துறையின் மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்கள் உணவு நிறுவன உரிமம் பெற்று, தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மேற்படி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், சுயவேலைசெய்வோர், வேளாண் தொழில், உள்ளாட்சி அமைப்புகளில் ( மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி) பணிபுரிவோர், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விபரங்களை வேலையளிப்பவர் மேற்படி வலைத்தளத்தில் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேற்காணும் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களின் விபரங்களை https://labour.tn.gov.in/ism/ என்ற வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆய்வின் சமயம் கண்டறியப்படும் நேர்வில், தொழிலாளர் நலத்துறை அலுவலர்களால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News