மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா
- சொக்கநாதபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மங்கை வள்ளி குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னிமலை,மார்ச்.3-
சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 15-ந் தேதி பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது.
பின்னர் 22-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் விழா நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சொக்கநாதபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக அக்னி கும்பம் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் காலை 7 மணிக்கு மேல் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவிலை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பொங்கலை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.
இதேபோல் அய்யம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது. கடந்த வாரம் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 1-ந் தேதி இரவு மங்கை வள்ளி குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா காலை நடைபெற்றது.
இதில் அய்யம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.