உள்ளூர் செய்திகள்

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

Published On 2023-01-04 10:17 GMT   |   Update On 2023-01-04 10:17 GMT
  • பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.
  • இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோபி:

கோபிசெட்டி பாளையத்தில் புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலானது பல நூறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கிய நிலையில் இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

இந்த ஆண்டு குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 9-ந் தேதி சந்தனகாப்பு அலங்காரமும், 11 ம் தேதி இரவு குண்டம் திறப்பு நிகழ்ச்சியும், 12-ந் தேதி அதிகாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துதல் நடைபெற உள்ளது.

இந்த ஆணடு அதிகளவு பக்தர்கள் வருவர்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு, பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ், 24 மணி நேரம் மருத்துவ குழுவினர், திருவிழா நடைபெறும் ஒரு வார காலத்திற்கு 24 மணி நேரமும் அரசு பஸ் போக்குவரத்து வசதி, அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிப்பறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, பொது சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறையினர், நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும், கோவில் விழாக்குழுவினர், பரம்பரை அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News