உள்ளூர் செய்திகள்

2 மோட்டார் சைக்கிள்கள் மோதி முதியவர் பலி, வாலிபர் காயம்

Published On 2022-09-02 12:25 IST   |   Update On 2022-09-02 12:25:00 IST
  • பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
  • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் ஐ.ஆர்.டி.டி. மெயின் ரோடு பகுதியில் பச்சியப்பன் (67) பணி ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இவர் தனது மோட்டார் சைக்கிளில் பவானியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டு நடராஜபுரம் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிகிறது.

பவானி ஈரோடு மெயின் ரோடு, சி.எஸ்.ஐ. பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தபோது அதே ரோட்டில் எதிரே மோட்டர் சைக்கிளில் வந்த கோவை, சுகுணாபுரம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது (25) என்பவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பச்சியப்பன் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவானி போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த அப்துல் ஹமீது பவானி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்த பச்சியப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News