- நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
- ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகின்றது.
சென்னிமலை:
ஒடிசா மாநிலம், மதுபூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் பெகரா. இவரது மனைவி நர்மதா பெகரா (30). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 10 மாத ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் இவரது தாயார் ஜீனுராணி, தங்கை பங்கஜனி பெகரா ஆகியோர் ஈங்கூர் எல்.ஐ.சி. காலனி, சக்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒடிசாவில் இருந்து மனைவி நர்மதா பெகரா தனது கைக்குழந்தையுடன் வந்து கணவர் ரஞ்சித் பெகரா மற்றும் மாமியாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அனைவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் நர்மதா பெகரா தனது குழந்தையை பார்த்துக்கொண்டு வீட்டில் இருந்தார்.
வெளியே சென்றிருந்த கணவர் ரஞ்சித் மதியம் வீட்டிற்கு வந்த போது மனைவி நர்மதா பெகரா இரும்பு கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தொங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவரை மீட்டு ஈங்கூர் தனியார் மருத்துமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நர்மதா பெகரா இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, ஈரோடு ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகின்றது.