உள்ளூர் செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் கடும் பனி பொழிவு

Published On 2022-11-16 15:20 IST   |   Update On 2022-11-16 15:20:00 IST
  • திம்பம் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டது.
  • மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்கள் சுவட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி வெளியே வந்து செல்கிறார்கள்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் வனப்பகுதி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த வழியாக பஸ், வேன், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வரு கின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாளவாடி, ஆசனூர், திம்பம், பண்ணாரி மற்றும் சுற்று வட்டார வனப்பகுதி களில் பரவலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் திம்பம் வனப் பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியது.

மேலும் வனப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அருவிகள் தோன்றி தண்ணீர் கொட்டி வருகிறது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக வனப்பகுதியில் மழை பொழிவு குறைந்தது. ஆனால் தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென பனி துளிகளுடன் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

மேலும் தொடர் மழை காரணமாக தாளவாடி, திம்பம், ஆசனூர், பெஜ லெட்டி, பண்ணாரி உள்பட வனப்பகுதிகளில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.

இதையொட்டி மலைப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். அவர்கள் சுவட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி வெளியே வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் காலை 8 மணி வரையும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வந்தனர்.

இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் இன்று காலை 2 வாகனங்கள் வந்து கொண்டு இருந்தது.

அப்போது அந்த 2 வாகனங்களும் திம்பம் மலைப்பாதை 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது பனி பொழிவு காரணமாக எதிர்பாராத விதமாக பக்க வாட்டில் உரசி கொண்டது.

இதனால் அந்த வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டிரைவர்கள் வாகனங்களை நடு ரோட்டில் அப்படியே நிறுத்தினர்.

இதனால் அந்த வழியாக வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதையொட்டி திம்பம் மலைப்பாதையில் ரோட்டோரம் கார், லாரி, சரக்கு வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.

இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News