உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிபாளையம் பகுதியில் இன்று காலை கடும் பனிப்பொழிவு

Published On 2022-12-15 09:23 GMT   |   Update On 2022-12-15 09:23 GMT
  • கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
  • இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

கோபி:

ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி காணப்படுகிறது. மேலும் வனப்பகுதிகள் அனைத்தும் பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

தற்போது மழை இல்லாததால் மாவட்டம் முழுவதுமே பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சவுண்டப்பூர், பாரியூர், மொடச்சூர், வடுகப் பாளையம், நல்ல கவுண்டன் பாளையம், நஞ்ச கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.

எதிரே நிற்பவர்கள் கூட தெரியவில்லை. இதனால் இந்த பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் காலை நீண்ட நேரமாகியும் வாகனங்களின முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்து சென்றது.மேலும் வயல் வெளிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டு பனித்துளிகள் படிந்து இருந்தது.

இந்த பனிப்பொழிவின் காரணமாக பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

கிராம பகுதிகளில் பொதுமக்கள் பனிப்பொழிவு மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க தீ மூட்டி குளிர்காய்ந்தனர். மொத்தத்தில் கோபி செட்டி பாளையம் சுற்றுவட்டார பகுதியே பனிப்பொழிவால் சூழ்ந்து இருந்தது.

Tags:    

Similar News