உள்ளூர் செய்திகள்

ஆசனூர்-கொள்ளேகால் சாலையில் தரை பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

Published On 2022-08-31 14:32 IST   |   Update On 2022-08-31 14:32:00 IST
  • பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • தரைப்பாலத்தின் அருகில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் முறிந்து தரை பாலத்தின் குறுக்கே விழுந்ததால் தரைபாலம் சேதாரம் அடைந்துள்ளது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தொடர்ந்து பலத்த மழை கொட்டியது.

பலத்த மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள ஓடைகள், பள்ளங்கள் மற்றும் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால் சாலை அரேப்பாளையம் பிரிவு அருகே உள்ள தரைப் பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது.

இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தரைப்பாலத்தின் அருகில் இருந்த பழமை வாய்ந்த பெரிய மரம் முறிந்து தரை பாலத்தின் குறுக்கே விழுந்ததால் தரைபாலம் சேதாரம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக கேர்மாளம், குளியாடா, மாவள்ளம், கானக்கரை, தேவர்நத்தம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மலை கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

இதே போல் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் இரவு பலத்த மழை பெய்தது, இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, விவசாய நிலங்களில் மழை நீர்குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாய பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News