உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் விவசாயி உடல் கருகி பலி

Published On 2023-03-01 10:06 GMT   |   Update On 2023-03-01 10:06 GMT
  • சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
  • புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம் சாயுபுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுடைய இளைய மகன் சந்திரமோகன் (46). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சந்திரமோகன் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் தூங்க சென்று விட்டார். அவரது தாய் சரஸ்வதி அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார்.

நள்ளிரவில் சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் பதறி அடித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர். ஆனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர்.

இதில் அவர் வீட்டில் இருந்து வெளியே எழுந்து வர முயன்ற போது புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்து விட்டார்.

இதுப்பற்றி தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே பார்த்தபோது சந்திரமோகன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News