- திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது.
- இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ–மனையில் மாரடைப்பால் இறந்தார்.
அவரது திடீர் இறப்பு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள குடியரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருமகன் ஈவெரா உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பு தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் தினசரி ஜவுளி சந்தையில் 260-க்கும் மேற்பட்ட தினசரி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் கடந்த சில நாட்களாகவே ஜவுளி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜவுளி சந்தையில் உள்ள தினசரி கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு கடைகளில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று பன்னீர்செல்வம் பார்கில் ஜவுளி வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மவுன ஊர்வலமாக கச்சேரி வீதியில் உள்ள திருமகன் ஈவெரா வீட்டுக்கு சென்றனர்.
பின்னர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.