உள்ளூர் செய்திகள்

அந்தியூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-08-12 10:12 GMT   |   Update On 2023-08-12 10:12 GMT
  • அந்தியூர் பேரூராட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
  • 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. 18 வார்டுகளில் 2 அ.தி.மு.க.வும், ஒரு கம்யூனிஸ்டு கட்சியும், 15 தி.மு.க. உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்த நிலையில் அந்தியூர் பேரூராட்சியில் மாதம்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதம் மாமன்ற கூட்டம் கடந்த 11-ந் தேதி (வெள்ளிக் கிழமை) நடைபெறுவதாக கவுன்சிலர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

பேரூராட்சி வார்டு உறுப்பினர்களால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் பேரூராட்சியில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பண்டிகை நடைபெறுவதால் உறவினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் காரணத்தை முன்வைத்து மாமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு மனு வழங்கியதாக தெரிவித்தனர்.

ஆனால் அறிவித்த தேதியில் மாமன்ற கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்ததை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. இதில் 35 தீர்மானங்கள் வாசிக்கும் நிலையில் 4-வது தீர்மானம் வாசிக்கும்போது வார்டு உறுப்பினர்களால் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மன்ற கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக பேரூராட்சி மன்ற தலைவரால் அறிவித்து விட்டு அங்கிருந்து தலைவர், துணைத்தலைவர், செயல் அலுவலர், நியமன குழு உறுப்பினர் சென்றனர்.

இருப்பினும் 10 கவுன்சிலர்கள் மாலை 6 மணி வரை மாமன்ற கூட்டத்தொடர் அறை யிலேயே அமர்ந்திருந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

மேலும் இங்கு வேறு ஏதேனும் கைகலப்பு ஏற்படும் என்று பேரூராட்சி அலுவலகம் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News