வேனில் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் கைது
- ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
- ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கந்தாம்பாளையம் பிரிவு பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் கந்தாம்பாளையம் பிரிவு அருகே வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில் வேனில் வந்தவர்கள் பவானி குருப்ப நாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல் (35), பழனிபுரம் முதல் வீதியை சேர்ந்த செல்வன் (48) என்பது தெரிய வந்தது.
அவர்கள் பொதுமக்களிடம் இருந்து வாங்கி பள்ளகாட்டூர் ரோஜா நகரில் 16 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
மொத்தம் அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட வேனை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் ரேஷன் அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பவானி மண் தொழிலாளர் முதல் வீதியை சேர்ந்த மணிகண்டன்(28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் பொதுமக்களிடம் இருந்து ரேசன் அரிசியை வாங்கி பெருந்துறை பகுதியில் தங்கி வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.